Friday, 31 July 2015

வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!
படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?
மன அமைப்பு
நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.
உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.
மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.
என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.
சுடுதண்ணீர் சிகிச்சை
ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.
அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.
நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.
ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.
பெரும் கண்டுபிடிப்பு
நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.
கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.
மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.
இரண்டும் நிஜங்கள்
பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.
இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.
“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”
இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.
“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.
எண்ணமே வாழ்வு
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!
எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Monday, 27 July 2015

இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.


வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.
‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.
பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.
1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.
அறிவியல் ஹீரோ
1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.
ஏவுகணை அவசியம்
‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.
எளிமையின் சிகரம்
ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.
ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.
இசைப்பதும் ரசிப்பதும்
உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.
வாருங்கள் இளையோரே
‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.
நிறைவேறாத கனவு
உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.
பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.
அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். 

Thank you 
THE HINDHU TAMIL

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்



http://tamil.thehindu.com/multimedia/dynamic/02269/valluvar_2269090f.jpg
நடராஜன் ஒரு வித்தியாசமான மனிதர் (ஆமாம் பெயர் மாற்றியாச்சு) 1972ல் ஒரு வங்கியில் எழுத்தராய்ச் சேர்ந்து, படிப்படியாய் முன்னேறி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். எண்களின் மேல் அவருக்கு அளவிலாக் காதல். வரிசையாய் எழுதியிருக்கும் மூன்று இலக்க எண்களைக் கூட மனக்கணக்காய்க் கூட்டிவிடுவார். கால்குலேட்டரே வேண்டாம். அபார ஞாபக சக்தி. வங்கியின் பழைய சுற்றறிக்கைகளை தேதியுடன் சொல்லி அசத்துவார்.
ஆனால் வங்கியில் கணினிமயமாக்கப்படல் தொடங்கியவுடன் அவரது செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. லெட்ஜரில் இருப்பைக் கூட்டிக்கழித்துக் காட்டுவது முதலான எல்லா வேலைகளையும் கணினிகளே செய்துவிட்டன. வாடிக்கையாளரின் விபரங்கள் பட்டனைத் தட்டினாலே கிடைத்தன. கணக்கில் புலியாய் இருப்பதனால் இருந்த முக்கியத்துவம் போய்விட்டது.
இதனால் நடராஜனுக்குச் சிறுகச்சிறுகக் கணினிகள் மீதும் அதில் தேர்ச்சிபெற்றவர்கள் மீதும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. நடராஜனுக்கு வங்கி கணினியில் பலமுறை பயிற்சி அளித்தும் அவர் மனம் அதில் லயிக்கவில்லை. அதைக்கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் நினைக்கவே இல்லை. மின்னஞ்சல் திறப்பதும், அனுப்புவதும் அவருக்குப் பிடிக்காதவை. வங்கி லேப்டாப் கொடுத்திருந்தாலும் உதவியாளர் மூலமே உபயோகிப்பார். தமது 57வது வயதில் கோட்ட அலுவலகத்தில் அவர் இரண்டாம் நிலை அதிகாரி.
அங்கே காளியப்பன் (மாற்றிய பெயர் தான்) எனும் 38 வயது துடிப்பான மனிதர் மூன்றாம் நிலை அதிகாரியாக வந்து சேர்ந்தார். இருவரும் உதவிப் பொது மேலாளர்களே. ஆனால் சீனியாரிட்டி காரணமாக காளியப்பன், நடராஜனுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. காளியப்பனுக்கு கணினியில் எல்லாம் அத்துப்படி. எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். தொழில்நுட்பம்தான் அவரது பலம். நீங்கள் எதிர்பார்த்தது போலவே நடராஜனுக்குக் காளியப்பனைக் கண்டாலே ஆகாது.
என் மகன் வயது அவனுக்கு என்பார். நடராஜன் விரும்பியிருந்தால் காளியப்பன் மூலமாகவே பலவற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இருவருக்கும் இடையில் பனிப்போரே தொடர்ந்தது. விதியின் விளையாட்டு அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் பதவி உயர்விற்கான நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டனர். பெரும்பாலான கேள்விகள் நீங்கள் பதவி உயர்வு பெற்றால் என்ன செய்வீர்கள் என்கிற ரீதியில் இருந்தன. நடராஜனோ பழம்பெருமையே பேசினார்.
தான் கடந்த 15, 20 வருடங்களில் சந்தித்த சவால்களை எல்லாம் சொன்னார். அவை எடுபடவில்லை. காளியப்பன் கணினிமயமாக்கலை எப்படி எதிர்காலத்தில் வியாபாரத்தைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லி பதவி உயர்வும் பெற்றுவிட்டார். சீனியராக இருந்தாலும் நடராஜன் புறக்கணிக்கபட்டுவிட்டார். காரணம் அவரது அணுகுமுறை. தனக்கு கணினி செயல்பாடுகள் தெரியாதது பற்றி அவருக்கு வருத்தமே இல்லை.
அந்தக் குறைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். மாறாக தற்புகழ்ச்சியிலேயே காலம்தள்ளி விட்டார். நீங்களும் நடராஜன் போன்ற நண்பர்களைச் சந்தித்து இருப்பீர்கள். அவர் காளியப்பனோடு நட்பு பாராட்டியிருந்தால் பயன்பெற்று இருப்பார் இல்லையா? எதிரிகள் அல்லது போட்டியாளர்களுடன் சாதுரியமாக நடக்காமலும், தன் தகுதியின் எல்லையை அறியாமாலும், தன்னைத் தானே வியந்தும் நடப்பவன் விரைவில் கெடுவான் என்கிறது குறள்!
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
- குறள் (474)
http://tamil.thehindu.com/multimedia/archive/02245/soma_2245117a.jpg

Friday, 24 July 2015

ஜெர்மானிய இனம் தான் உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான காரணமானது.




எண்ணம்தான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நல்ல செய்தி என்னவென்றால் எண்ணம் மாறக்கூடியது. மாற்றக்கூடியது. அதனால், எண்ணத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளும் மாறக்கூடிவை. மாற்றக்கூடிவை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை மாறக்கூடியது. மாற்றக்கூடியது.
விதைகளாய் எண்ணங்கள்
நம் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் சில எண்ணங்களில் உருவானவை தானே? ஜெர்மானிய இனம் தான் உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான காரணமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணம் பாகிஸ்தானை உருவாக்கியது.
தேர்தல் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கைகளிலிருந்து கட்சி நுழைந்தால் திசை திரும்பிவிடும் என்ற ஈ.வெ.ரா.வின் எண்ணம் தான் திராவிடர் கழகத்தை அதிகாரத்தில் ஏற்றாமல் வைத்திருந்தது. அதற்கு மாறாக, தேர்தல் அரசியல் தான் திராவிடக் கொள்கைகளைச் செயல்முறைப்படுத்த உதவும் என்ற அண்ணாவின் எண்ணம் தான் தி.மு.க.வை அரியணையில் ஏற்றியது.
பெரிய நட்சத்திரங்களை நாடாமல் புது நடிகர்களை வைத்து நல்ல கதைகளை இயக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்ற கே.பாலச்சந்தரின் எண்ணம்தான் பல புதிய நடிகர்களை அறிமுகப்படுத்த வைத்தது. (பின்னாளில் அவர்களில் பலர் அவரே பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிய நடிகர்கள் ஆனார்கள் என்பது தனிக் கதை!)
சிலரின் முக்கியமான எண்ணங்களே வரலாற்றின் விதைகள்.
திருப்புமுனைகளாய்..
அதே போல, பலரின் மன மாற்றங்கள் வரலாற்றின் திருப்புமுனைகள். உலக வரலாறு மட்டுமல்ல, உங்கள் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். மாறிய எண்ணம்தான் வாழ்க்கைப் போக்கையே திருப்பியிருக்கும். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு எண்ணத்தின் பிரதிபலிப்புதான்.
உங்கள் எண்ணம் உங்கள் உணர்வையும், உங்கள் நடத்தையையும், உங்கள் உறவையும், உங்கள் உடலையும் பாதிக்கிறது என்றால் அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றினால், மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் அல்லவா?
முடியும் என்று எனக்கு முழுவதுமாக புரிய வைத்தவர் லூயிஸ் ஹே.
வெற்றிச் சின்னமாய் லூயிஸ்
ஒன்றரை வயதில் தந்தை, தாயைப் பிரிகிறார். தாயை மணந்தவரும் கடுமையாக நடந்து கொள்கிறார். ஐந்து வயதில் பக்கத்து வீட்டுக் கிழவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். 15 வயதில் கர்ப்பம். பிள்ளையில்லா தம்பதியிடம் கொடுத்துக் குற்ற உணர்ச்சியுடன் பிரிகிறார். படிக்காததால், கிடைத்த வேலைகளைச் செய்கிறார். மெல்ல மெல்ல ஒரு மாடல் நடிகை ஆகிறார். தாயை விட்டுப்பிரிகிறார்.
புகை, மது, பல ஆண்களுடன் உறவு எனச் செல்லும் வாழ்க்கை ஒருவருடன் திருமணம் என்ற திருப்புமுனையை அடைகிறது. 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் உலகம் சுற்றி வருகிறார். வாழ்க்கை வசப்படுகையில் இன்னொரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டு இவரைப் பிரிகிறார் கணவர்.
இறை வழியில் கிறிஸ்துவப் பாடங்கள் அவரை வழி மாற்றுகின்றன. தேவாலயத்திலேயே பாடம் எடுக்கும் அளவு வளர்கிறார். மனதுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து புத்தகம் எழுதுகிறார். இணை மருத்துவ முறைகளைக் கற்கிறார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்குப் புற்றுநோய் என்று தெரியவருகிறது. மருத்துவர்கள் கையை விரிக்கின்றனர்.
உடைந்து போகிறார். பின் தான் கற்றதையும் எழுதியதையும் போதித்ததையும் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறார். தன் மனதில் உள்ள இறுகிப்போன எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளியேற்றுகிறார். தாயைத் தேடிச் சென்று மீண்டும் இணைகிறார். தாயையும் சுகப்படுத்துகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு பரிபூரண அமைதியை உணர்கிறார்கள்.
புற்று நோய் குணமாகிறது. தொடர்ந்து புத்தகங்களும் கருத்தரங்குகளும் உலகின் நூற்றுக்கணக்கான மொழிகளில் வெற்றி பெறுகின்றன. தாய் மனநிறைவுடன் இயற்கை எய்துவதற்கு விடை கொடுக்கிறார்.
80 வயது கடந்தும் இன்றும் மிகுந்த ஆரோக்கியத்துடனும், துள்ளலும், நகைச் சுவையுடனும், தெளி வான அறிவுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு வருகிறார் லூயிஸ் ஹே!
எண்ணமும் நோயும்
அவரின் எழுத்துக்கள் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. அப்படிப் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்.
எனக்கு ரெய்கி சொல்லித்தந்த ஆசான் அஃபர்மேஷன்ஸ் என்ற ஒரு நேர்மறை சிந்தனை முறை கொண்டு உடல் சார்ந்த எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் என்று கூறியபோது முழுவதுமாக நம்ப முடியவில்லை.
அது எப்படி எண்ணத்தை மாற்றியே நோயைக் குணப்படுத்துவது? அப்படி என்றால் எல்லாரும் எல்லா நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாமே? அப்படி என்றால் டாக்டர் எதற்கு, ஆஸ்பத்திரி எதற்கு? இப்படித்தான் எனது எண்ணங்கள் இருந்தன.
நான் லூயிஸ் ஹேயின் புத்தகங்கள் படித்தேன். அவரின் சிகிச்சை உத்திகள் எவ்வளவு அறிவியல் பூர்வமானவை என்று உணர்ந்தேன். முதலில், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பயன்படுத்தினேன். பிறகு, இதை என் மற்ற வழிமுறைகளுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் அளித்தேன்.
பிறகு பயிற்சி வகுப்புகளிலும் உளச் சிகிச்சைகளுக்கும் தீவிரமாகப் பயன்படுத்தினேன். இதைப் பயன்படுத்தியவர்கள் தந்த குறிப்புகளும் செய்திகளும் என்னை மேலும் நிபுணத்துவம் பெற வைத்தன.
தீராத பல உடல் உபாதைகளை நேர்மறைச் சிந்தனை மூலம் குணமாக்க முடிந்தது. Metaphysical Medicine, Mind- Body Medicine, Quantum Healing எனப் பல சிகிச்சை முறைகளுக்கு Affirmations களுக்கு உள்ள தொடர்பு புரிந்தது.
உங்கள் உடல் சுகவீனங்களை உங்கள் எண்ணங்கள் மூலம் மாற்றிச் சுகமளிக்கும் வழிமுறை என்ன என்று விளக்கப் போகிறேன். திறந்த மனதுடன் தயாராகுங்கள்!

Wednesday, 22 July 2015

பல நோய்களுக்கான காரணம் மனதில்தான் உள்ளது. மனதின் கோளாறு உடல் கோளாறாக வெளிப்பட முடியும்.

நம் வாழ்வில் அ ஃபர்மேஷன் வாக்கியங்களின் மூலம் வியக்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிட்டத்தட்ட மாயாஜாலம் என்று சொல்லுமளவுக்கு அந்த மாற்றங்கள் இருக்கவும்கூடும். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
உடல் நலமும் தொழில் நலமும்
ஓசூரில் ஒரு பெரிய தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இணக்கமில்லாத சூழலில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டியிருந்தது. தொழிற்சங்கத்துக்கு இந்த வகுப்பில் நம்பிக்கையில்லை. இந்த வகுப்பை எப்படிக்கொண்டுபோவது என்று மனிதவளத் துறைக்கும் புரியவில்லை.
நிர்வாகத்தினரிடம் “முதல் வகுப்பில் சங்க நிர்வாகிகள் மட்டும் உட்காரட்டும். நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் இரண்டு நாட்களுக்கு வர வேண்டாம். இந்தப் பயிற்சி பயன் தரும் என்று சங்கத்தினர் சொன்னால் மற்றவர்களுக்குத் தொடரலாம்” என்று நான் சொன்னேன். எனது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன்.
வந்திருந்தவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்கான அஃபர்மேஷன் வாக்கியங்களைத் தமிழில் முதல் முறையாகக் கொடுத்தேன். எப்படிச் செயல்படுகிறது என்று அறிவியல்பூர்வமாக விளக்கி அவர்களின் தொழிலகத்தின் உறவுச் சிக்கல் வரை இதில் தீர்க்க முடியும் என்று புரிய வைத்தேன். சங்கம் பரிந்துரைத்ததால் எல்லாத் தொழிலாளிகளும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார்கள்.
மாதக் கணக்கில் இழுபறியாக இருந்த சிக்கல் தீர்ந்தது. அந்தத் தொழிலாளர் குடியிருப்பில் அஃபர்மேஷன் அவ்வளவு பிரபலமானது. இந்த அனுபவத்துக்குப் பிறகுதான் தேவைப்படும் எல்லா இடங்களிலும் இந்த முறையை முழுவதுமாகப் பயன்படுத்த ஆரம்பித்தேன்!
கடிகளும் எண்ணங்களும்
ஒரு வகுப்பில் இருந்தவருக்குப் பூச்சிக்கடியால் கைகளில் தடிப்பு தடிப்பாக வீக்கம் இருந்தது. “நீங்கள்தான் எல்லாவற்றையும் நாம் கவர்கிறோம் என்று சொல்வீர்களே? இப்போது அஃபர்மேஷன் முறையில் இவரைச் சரிப்படுத்துங்கள்” என்று சவால் விடுவதுபோல, அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் கேட்டார்.
விஷக்கடிகள் பற்றியும் அவற்றைக் கவரும் உள்மனச் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பற்றி நான் அதிகம் அறிந்திராத காலகட்டம் அது. எனினும் இந்த அணுகுமுறையின் அடிப்படை அம்சங்களில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
“எனக்கு ஏன் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் அனைவரும் சென்ற பாதையில் இவர் ஒருத்தருக்கு மட்டும் இது ஏற்பட்டுள்ளது என்றால் நிச்சயம் இவர் இதைக் கவர்ந்துள்ளார். இது எதனால் என்று தெரியாவிட்டாலும் ஒரு பொதுப்படையான வாக்கியம் மூலம் இதைச் சரிசெய்ய முயலலாம்!” என்றேன். “பூச்சிக்கடிக்குக் காரணமான என் எண்ணங்களையும் உணர்வுகளையும் நான் முற்றிலுமாக வெளியேற்றுகிறேன்!” என்று ஒரு பக்கம் முழுதும் எழுதச் சொன்னேன்.
முழு நம்பிக்கையுடன் மனப்பூர்வமாக இதை எழுதினால் அதற்கான பலன்களை அடையலாம் என்பதுதானே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வலிமை?
எழுதியவரின் கைகளில் இருந்த தடிப்புகள் மெல்ல நீங்கின. அவருக்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
“பாம்பு கடிச்சா இது போல எழுதினா சரியாகுமா?” என்று குறும்பாகக் கேட்டார் அதே நண்பர்.
“நான் பயன்படுத்தவில்லை. ஆனால், கடிபட்டவருக்கு பாடம் போட்டு மந்திரம் சொல்லி விஷம் இறக்கும் ஆட்கள் இன்றும் கிராமங்களில் உள்ளனர். அவர்களின் வழிமுறைகளும் உடலைத் தாண்டிய மருத்துவம்தானே?” என்றேன் நான்.
நான் சொல்ல வருவது மந்திர சக்தி பற்றி அல்ல. ஆழ்ந்த நம்பிக்கையுடன் அஃபர்மேஷன் வாக்கியங்களைச் சொல்லும்போது அங்கே நம் மனமே சிகிச்சைக்கான வேலைகளைச் செய்கிறது. மனதின் அளப்பரிய ஆற்றல்களில் ஒன்று அது. அதை வெளிக்கொணர உதவுவதே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வேலை.
ஆழ்மனத் தியானம், அஃபர்மேஷன் முறைகள், ஹிப்னாஸிஸ் போன்றவை அலோபதிக்கு எதிரானவை அல்ல. எனக்குத் தெரிந்து சில அலோபதி மருத்துவர்கள் இத்தகைய மாற்று சிகிச்சைகளைச் சிபாரிசு செய்வது உண்டு. உடலை மட்டும் குணப்படுத்த முயலாமல் மொத்த உயிரையும் குணப்படுத்த நினைப்பவை இந்த வழிமுறைகள்.
ஒரு தவறான எண்ணம்கூட அதன் பாதிப்பை உடலில் காட்டிவிடும். எது விதை என்று தெரியாமல் மரமாகி வளர்ந்து நிற்கும்போதுதான் அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம். இதனால் தான் இத்தனை நோய்கள், இத்தனை பிரச்சினைகள், இத்தனை சேதங்கள்!
நேர்மறை மனம்
ஒவ்வொரு வலியும் நமது தவறான சிந்தனை ஒன்றை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. வலி ஞானத்துக்கு வழி செய்கிறது.
ஒவ்வொரு உடல் உபாதையையும் உள் நோக்கிப் புரிந்துகொண்டு அதன் விதையான சிந்தனையை எதிர்கொண்டால் தான் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியும். அதனால்தான் இன்று யோகாவையும் ஹிப்னாஸிஸ் போன்ற வழிமுறைகளையும் மெல்ல மெல்ல அனுசரணையாக அலோபதி மருத்துவமும் பார்க்க ஆரம்பித்துள்ளது.
அஃபர்மேஷன் முறை எந்த முறைக்கும் எதிரானது அல்ல. உங்கள் மனதை நேர்மறையாகத் திருப்பும் முயற்சி. அவ்வளவுதான்.
விடை உங்களுக்குள்ளே
பல நோய்களுக்கான காரணம் மனதில்தான் உள்ளது. மனதின் கோளாறு உடல் கோளாறாக வெளிப்பட முடியும்.
தீராத மூல நோயால் அறுவைச் சிகிச்சைவரை சென்ற பெண்மணி தன் நோயின் உளவியல் காரணம் புரிந்து அஃபர்மேஷன் முறையில் பயிற்சி எடுத்தபோது மருத்துவர்கள் வியக்கும் வண்ணம் பூரணமான சுகம் பெற்றார்.
மூட்டு வலியை இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு தலைமைச் செயல் அதிகாரி நினைத்தார். தன் பெற்றோர்களுக்கும் தனக்குமான உறவு முறைதான் அந்த வலிக்கான காரணம் என்று தெரிந்துகொண்டார். அதன் பிறகு அஃப்ர்மேஷன் மூலம் மீண்டும் ஓட முடியும் அளவுக்கு குணமானார்.
அளவில்லாத கடன் சுமையில் இருந்தவர் ஒரு வருடத்தில் தன் நிதிநிலையைச் சீர் செய்தார். தன் எண்ணங்களால்தான் அத்தனை நஷ்டமும் என்று புரிந்ததும், அவர் அஃபர்மேஷன் எழுத ஆரம்பித்தார். எழுதும்போதே நிலைமை சரியாவதை உணர்ந்தார்.
விவாகரத்து வரை சென்ற தம்பதியினர் தங்கள் நிலைக்குக் காரணம் பொதுவான ஒரு எண்ணம்தான் எனப் புரிந்துகொண்டு அதை அஃப்ர்மேஷனில் மாற்றி ஒன்று சேர்ந்தனர்.
நிறைய நிஜ நிகழ்வுகள் ஆழ் மன அற்புதச் சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. உங்கள் பிரச்சினைக்கான விடை உங்கள் பிரச்சினைகளுக்குள்ளேதான் ஒளிந்துள்ளது. வெளியே இல்லை. அதை வெளிக்கொண்டுவந்து அதன் திசையை மாற்றும் அற்புத வழிமுறை தான் அஃபர்மேஷன் முறை.
நம்பினார் கெடுவதில்லை என்பது சத்திய வாக்கு. அந்த நம்பிக்கை ஆண்டவன் மீது இருந்தாலும் சரி. அல்லது அந்த ஆண்டவனே உங்களுக்குள்தான் என்று நினைத்து உங்களையே நம்பினாலும் சரி. நம்பிக்கை பலிக்கும்!

Thursday, 9 July 2015

நம்மை உயர்த்தும் விஷயங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்
2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...
நகை
பணம்
சொத்து
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...
புத்தி
கல்வி
நற்பண்புகள்
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...
உண்மை
கடமை
இறப்பு
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை
...
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...
தாய்
தந்தை
இளமை
7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...
சொத்து
ஸ்திரி
உணவு
8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...
தாய்
தந்தை
குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..